Thursday, 16th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாஜக அரசு விவசாயிகளுக்கு செய்யவில்லை மத்திய அரசுக்கு ஆர். வேலுசாமி எச்சரிக்கை

ஜனவரி 14, 2024 11:46

ராசிபுரம்: மத்திய பாஜக அரசு, தனது 10 ஆண்டு கால ஆட்சியில், புயல் மழை, வறட்சி, கொரோனா பெருந்தொற்று ஆகிய பேரிடர் காலங்களில் விவசாயம் பாதிக்கப்பட்ட போது விவசாயிகளுக்கு யாதொரு நன்மையும் செய்யவில்லை துரோகம் தான் செய்துள்ளது.

இதுகுறித்து உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம்த்தின் தலைவர் ஆர். வேலுசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. 
மத்திய பாஜக அரசு 2023 ஆம் ஆண்டு விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு ஆக்கப்படும் என்று அறிவித்தது ஆனால் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு ஆக்கப்படவில்லை.

மத்திய பாஜக அரசு தனது பத்தாண்டு கால ஆட்சியில் விவசாயிகளின் வளர்ச்சிக்காக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் இச்சமயத்தில் விவசாயிகளுக்கு இயற்கை பேரிடர்களால் ஏற்பட்ட இன்னல்களான வறட்சி, புயல் மழை, பெருவெள்ளம் மற்றும் கொரோனா பெருந்தொற்று ஆகிய காலங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் அழிந்து, விவசாயம் முற்றிலும் அழிந்து நாசமாகி விட்டது.

இதுபோன்ற சமயங்களில் மத்திய அரசு வெறும் கண்துடைப்புக்காக மட்டும் வல்லுநர் குழுவை அனுப்பி, பயிர் சேதங்களை ஆய்வு செய்து அறிக்கை பெற்றாலும், அது விரலுக்கு இறைத்த நீர் போல்தான் உள்ளது.

இது போன்ற காலங்களில் விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய பயிர் கடனையும் மற்றும் பண்ணை சாரா கடனையும் முழுவதும் தள்ளுபடி செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றாமல் அவர்களை தற்கொலைக்கு தூண்டுகிறது.

 ஆனால் மற்றொருபுறம் பெரும் செல்வந்தர்களாக உள்ள கார்ப்பரேட் நிறுவன முதலாளிகளுக்கு மட்டும் கடனை தள்ளுபடி செய்வதோடு அல்லாமல் வரிச் சலுகையும் கொடுக்கிறது.

மேலும் மத்திய பாஜக அரசு தனது பத்து ஆண்டு ஆட்சி காலத்தில் ஒரு முறை கூட கர்நாடகாவிடம் இருந்து தமிழகத்துக்கு உரிய காவிரி நதி நீரை பெற்று தரவில்லை, என்பதோடு அல்லாமல் விவசாயிகள் உற்பத்தி செய்த விளை பொருட்களுக்கு கட்டுபடியான ஆதார விலையையும் அறிவிக்கவில்லை.

மத்திய பாஜக அரசு தனது பத்து ஆண்டு ஆட்சி காலத்தில் விவசாயிகளை வஞ்சிக்க மட்டுமே செய்துள்ளது.

எனவே இது போன்ற விவசாயிகளுக்கு எதிரான மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகளை கண்டிக்கும் விதமாக இனிவரும் காலங்களில் விவசாயிகள் ஒன்று திரண்டு தங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை மட்டுமே உற்பத்தி செய்து, உணவு பஞ்சத்தை உண்டாக்குவதோடு  அல்லாமல், தங்களுக்குள் மட்டும் பண்டமாற்று முறையில் வாணிபம் செய்து பெரும் பொருளாதார நெருக்கடியையும் உருவாக்குவார்கள் என்பதை உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் தனது அறிக்கையின் மூலமாக மத்திய அரசுக்கு மாநிலத் தலைவர் ஆர்.வேலுசாமி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்